×

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அப்பாவிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ராமு, அதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாங்கிய ரூ.10 லட்சம் கடனை அடைக்க முடியாமல் அரக்கோணத்தை அடுத்த தணிகைப் போளூரில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இராமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஆறாவது நபர் ராமு. ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு. கோடை விடுமுறை விடப்படுவதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The post ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அப்பாவிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Ramu ,Tiruthani Periyar, Tiruvallur district ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...